எஸ்ஆர்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை பாரதி நினைவு நூற்றாண்டு விழா
”எஸ்ஆர்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி”யும் ”நான் ஓர் ஐஏஎஸ் அகாதமி”யும் இணைந்து நடத்திய பாரதி நினைவு நூற்றாண்டு விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக, ”ஊருக்கு உழைத்தல் யோகம்” எனும் தலைப்பிலான பொழிவு இணையவழியில் 11.09.2021 சனிக்கிழமை முற்பகல் காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. தமிழ்த்துறையின் சார்பாக நடைபெற்ற இவ்விழா, புலம்பெயர்ந்த தமிழரான நார்வே நாட்டு ’கலாசாதனா’ எனும் அமைப்பின் நிறுவனர் திருமிகு. கவிதா லஷ்மி அவர்கள் பாரதியின் இசையில் நிகழ்த்திய நடனக் காணொளிக் காட்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து துணைமுதல்வர் பேராசிரியர் கா. மதியழகன் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். முதல்வரும் பேராசிரியருமான முனைவர் இரா. வாசுதேவராஜ் அவர்கள் ”தேடிச் சோறு தின்று…. வீழ்வேன் என்று நினைத்தாயோ…..” எனத் தனக்கு மிகவும் பிடித்தமான பாரதியின் வரிகளைக் கோடிட்டுக்காட்டி தலைமையுரை நிகழ்த்தினார். அடுத்து “நான் ஓர் ஐஏஎஸ் அகாதமி” யின் இயக்குநர் திருமிகு கவிஞர் தமிழ் இயலன் அவர்கள் தனது நோக்க உரையில் ’ஊருக்கு உழைத்தல் யோகம்’ எனும் தலைப்பு பாரதிக்குப் பொருந்துகிற தன்மையை எடுத்துக்கூறி விளக்கினார். முனைவர் கு. பத்மநாபன் அவர்கள் உதவிப்பேராசிரியர், தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறை , திராவிடப் பல்கலைக்கழகம், சீனிவாசவனம். குப்பம்-517426 (பேசி- 94918 17945) ’ஊருக்கு உழைத்தல் யோகம்’ எனும் தலைப்பில் பாரதியின் பன்முக ஆளுமை குறித்து மிகச்சிறந்ததொரு சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் பாலமாக பாரதி விளங்கினார்.
ஊருக்கு உழைத்திடல் யோகம்
நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும்உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய் ஞானம்..
உள்ளிட்ட உழப்பின் சிறப்பு பற்றிய பலபாடல் வரிகளை எடுத்துக்காட்டி, பாரதி தன்னம்பிக்கையின் வழிகாட்டியாக விளங்குகிறார். தான் வாழ்ந்த காலத்தில் பெண்விடுதலை, சமுகவிடுதலை, தேசிய விடுதலைக்காகக் குரல் கொடுத்த போராளியாக விளங்கினார் என்பதனை விளக்கிச் சிறப்புரை நிகழ்த்தினார்.
முனைவர் ஜெ. முனுசாமி அவர்கள் இந்நிகழ்வினை முன்னெடுத்ததோடு, பாரதி பாடல் வரிகள் பல எடுத்துக்காட்டி, சிறந்த தொகுப்புரையும் வழங்கினார்.
நிகழ்வின் நிறைவாக முனைவர் கி.சுந்தர ராஜ் துறைத்தலைவர்(பொ) வரவேற்புரை, தலைமையுரை, நோக்கவுரை, சிறப்புரை, தொகுப்புரை, நிகழ்த்தியவர்களையும் வந்து சிறப்பித்தவர்களையும் நினைவு கூர்ந்து நன்றி தெரிவிக்க விழா இனிது நிறைவேறியது.